
கப்டன் மயூரன் தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் ஏழாவது புதல்வன். மயூரனின் தந்தை சபாபதிப்பிள்ளை. தியாகராஜா இலங்கையின் புகையிரதநிலைய அதிபராக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் பல வருடங்களாகக் கடமையாற்றியவர். அண்ணன் பிறேமராஜன் (தீட்சண்யன்). கவிஞர். ஆசிரியர். 1990 இல் நடைபெற்ற ´ஷெல்´ தாக்குதல் ஒன்றில் ஒரு காலையும், ஒரு கையின் செயற்பாட்டையும் இழந்தவர். தமிழீழ விடுதலைப்புலிகளின் மொழிபெயர்ப்புப் பிரிவொன்றின் முக்கிய மொழிபெயர்பாளராகச் செயற்பட்டவர். புலிகளின் குரல் வானொலிக்கு கவிதைகள் எழுதியும் கவியரங்கங்கள் செய்தும் பங்காற்றியவர். மே 13, 2000 இல் மரணித்து விட்டார். இன்னொரு அண்ணன் கப்டன் மொறிஸ் , 1984 இல் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து, விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளராகப் பணியாற்றி, மே 1, 1989 இல் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் தீரத்துடன் போராடி வீரமரணத்தைத் தழுவிக் கொண்டார்.
மயூரன் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும், ஹாட்லிக் கல்லூரியிலும் கற்றார். யாழ் மாவட்டப் பகுதியில் சிங்கள அரச இராணுவத்தின் கட்டு மீறிய அட்டூழியங்களும் சகோதரன் கப்டன் மொறிஸ் இன் விடுதலை இயக்கப்பணிகளும், அவன் இணைந்து பணியாற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழின விடுதலை நோக்கும், அசைக்க முடியாத உறுதியும் இவரை விடுதலைப்போராட்டத்தில் இணையத் தூண்டின. ஜனவரி 1987 இல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இவரது ஆரம்பப் பணி
போராளிகளின் முல்லை நில (காடும் காடு சார்ந்த நிலமும்) வாழ்வுடனான போராட்டப் பயிற்சி.
இவர் இணைந்திருந்த பயிற்சிக் குழுக்கள்
ஆரம்பத்தில் கிட்டுமாமா தலைமை. பின்னர் வீரமரணம் வரை சொர்ணம் தலைமை.
இவர்பணியாற்றிய குழு
'ஓ' குறூப் அல்லது 'சைவர்' குறூப்
போராட்ட காலம்
மயூரன் போராட்ட காலம் முழுவதும் விடுதலைப் புலிகளின் தலைவரின் அருகாமையிலேயே வாழ்ந்திருந்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்ப உறுப்பினர்களுடன் உறவாடி, விளையாடி, அதே நேரம் மண்ணிற்காய் போராடி வாழ்ந்தார். தலைவரின் குழந்தைகள் இவரால் அவ்வப்போது தாலாட்டி, உணவூட்டப்பட்ட கதைகளும் உண்டு. இவர் மென்மையான உள்ளம், தளராத மனவுறுதி, தன்னிகரற்ற துணிச்சல் கொண்டவர்.
1988 காலப்பகுதியில் காடுகளில் வாழும் தமிழ் போராளிகளை அழிக்கும் நோக்கில் ஈழப்பகுதியில் காலடி வைத்திருந்த இந்திய இராணுவத்தினரின் தந்திரமான காடு வளைப்புத் தாக்குதல்களின் போதான எதிர்நடவடிக்கைத் தாக்குதல்களில் பெரும்பாபாலான சமயங்களில் இவர் பங்குபற்றி இருந்தார்.
ஒரு தடவை இராணுவத்தினரின் முரட்டுத்தனமான தாக்குதல்களிலிருந்து மீளும் பொருட்டு, போராளிகளைப் பின்வாங்கும் படி அறிவுறுத்தப்பட்ட பின்பும், இவர் தனியாக நின்று போராடி 70க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினரை அழித்தும், காயப்படுத்தியும் இருப்பிடம் திரும்பினார்.
காட்டு வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சமான உணவு உறையுள் என்ற மிகச் சிரமமான விடயங்களை மிக இலகுவாக கையாளத் தெரிந்த மதிநுட்பம் நிறைந்த போராளிகளில் இவர் முக்கியமானவர். போராளிகளுக்கான உணவுத் தேவைகளை இயற்கையுடன் ஒன்றிய வழிகளில் தேடிக் கண்டு பிடித்து தயார்ப்படுத்துவதில் திறமை பெற்றிருந்தார். அதற்காகவே தோழர்கள் இவரைத் தேடிப்பிடித்து அழைத்துச் செல்வது ஒரு வழமையான வேலையாக இருந்தது.
கையினால் இவர் ஆற்றும் பணிகள் கடுமையாக இருந்ததால் கை விரல்கள் இயங்க மறுத்த சுகவீன நிலைகளுக்கும் அவ்வப்போது ஆளாகி சிகிச்சை பெற்றிருந்தார்.
மோட்டார் வாகனம் எப்போதும் இவரின் பயணத் துணையாக இருந்தது.
முக்கிய தாக்குதல்கள்
இதயபூமி
ஆகாய கடல் வழிச்சமர்
ஆனையிறவுச்சமர்
மண்கிண்டி மணலாறு வெற்றிச்சமர் (1991)
பூநகரி 2வது சமர்
பூநகரி தவளைப் பாய்ச்சல் வெற்றிச் சமர் (1993, கார்த்திகை)
இறுதிச் சமர் இறுதிச் சமரான பூநகரி தவளைப் பாய்ச்சல் சமருக்கு இவர் செல்ல விரும்பிய போது 'இப்ப அவசரப்படாதை பிறகு பார்க்கலாம் ' என்று விடுதலைப்புலிகளின் தலைவர் கூறினார். ஆனாலும் 'இல்லை நான் போகப்போகிறேன்² என்று பிடிவாதமாக நின்று விருப்பப்பட்டுச் சென்றார். பூநகரி தவளைப் பாய்ச்சல் என்ற பெயரில் நிகழ்ந்த முகாம் தாக்குதலில் முதல் அணியாக சென்று அதில் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மயூரனின் இளையக்காவிடம்
"அவன் பூநகரித் தாக்குதலுக்குப் போக முதலே என்னை அதுக்கு விடுங்கோ… இதுக்கு விடுங்கோ எண்டு ஆக்கினை பிடிச்சுக் கொண்டுதான் இருந்தவன். நான் இப்ப அவசரப்படாதை பிறகு பார்க்கலாம் எண்டு கடத்திக் கொண்டேயிருந்தன். எங்கையாவது நான் வந்து இருந்தால், என்ரை கண்ணுக்கு முன்னாலை வந்து நிண்டு எதையாவது நோண்டிக் கொண்டு நிற்பான். கடைசியா சரி எண்டு அவன்ரை ஆசைக்காகத் தான் போக விட்டனான்" என்று கூறிவிட்டு சில கணங்கள் மெளனமானார்.